ஆயுள் கைதி கவிதை

ஆயுள் கைதியின் கடிதம்


அன்புள்ள
 ஆண்டவருக்கு!
ஆயுள் கைதி நான்
எழுதுவது என்னவென்றால்...

மனதை விட்டு  என்
வார்த்தைகளை
பகிர்தலுக்கு யாருமில்லை
நிலை புரியா
நீண்ட தூரத்தில்...
நீதிக்காக காத்திருக்கிறேன்...


குற்றவாளி வெளியிலிருக்க...
குற்றத்திரையால் மூடப்பட்ட
என் கதையை
உனை தவிர யாரிடம் போய்
சொல்லியழுவது!

கம்பி எண்ணியே
காலம் கழிவதா?

என் நினைவுகளை
எனக்குள்ளே மறைத்துக் கொண்டு

சிறையின் மூலையில்
உடைந்த ஓரங்களில்
சிந்தனையில் மூழ்கி
சிக்குண்டு மனம் சிதைந்து
நிற்கின்றேன்!

 என்
இதயத்தை ஆணி கொண்டு
அடித்தாற் போல் வலிக்கிறது
உண்மையை பிரதிபலிக்க  உன்
சக்தி ஒன்று தான் நீதியின் வாசலை
திறக்குமென்று நினைக்கிறேன்!

வெறும் சுவரை
அண்ணார்ந்துப் பார்த்துக் கொண்டு
நிலைக்குலைந்த மனதுடன்
ஒவ்வொரு நிமிடமும்
மரணிக்கின்றேன்!

பொய் எது?
மெய் எது?
என்று விவாதிக்க போவதில்லை
உண்மையை வாழ வைக்க  நீ
எனக்கு கை கொடுக்க வேண்டும்!

அதிக உள்ளச் சுமையுடன்
அமர்ந்திருந்த நான்
உன்னை
சுமைதாங்கியாக நினைத்து
எனது சுமையை இறக்கி விட்டேன்!

இறைவா  இங்கு
நீதி தேவதையின்
கண்களுக்கும் கரி
பூசி விட்டார்கள்!

தொலைந்து கொண்டிருக்கும்  என்
வாழ்க்கைக்கு  - நீ
அற்புதமாய் அவதரித்து
நீதிக்காய் நின்று கொண்டிருக்கும்
ஆயுள் கைதி எனக்காக...
நியாயத் தீர்ப்பினை
வழங்குவாயா?
இப்படிக்கு
காத்திருக்கும்
உன்
ஆத்ம ஆயுள் கைதி!

- ரேணுகா தாஸ்

Comments